புதுடெல்லி: தெலங்கானா முதலமைச்சரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டி, நேற்று டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார். அவருடன் துணை முதல்வர் விக்ரமார்கா, மாநில அமைச்சர் பொங்குலேடி நிவாஸ் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுகுறித்து ரேவந்த் ரெட்டி கூறுகையில், ‘வரும் மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் சோனியா காந்தி போட்டியிட வேண்டும் என்று அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
அவர் தெலங்கானாவில் போட்டியிட வலியுறுத்தி, தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆந்திராவில் இருந்து தெலங்கானாவுக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கிய சோனியா காந்தியை, எங்கள் மக்கள் அவரை தாயாக கருதுகின்றனர். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் அவர் எங்களது மாநிலத்தில் எந்த தொகுதியிலும் போட்டியிட வேண்டும். அவர் சரியான நேரத்தில் முடிவெடுப்பார். வரும் லோக்சபா தேர்தலில், தெலங்கானாவில் அதிக இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும்’ என்று கூறினார்.