சென்னை: வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற மமக தலைமை பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் கொண்டுவரப்பட்டது. சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச்செயலாளர் அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடந்த மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்கப்படாத நிலையில், இந்தமுறை சீட் ஒதுக்க வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் போட்டி குறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். நாடு முழுவதும் ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உண்மைத் தகவலை வெளியிட வேண்டும். மாநில அரசை முடக்கும் வேலையை மட்டும் செயல்படும் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும் என்று மமக தீர்மானம் நிறைவேற்றியது.
மமக பொதுக்குழுவில் முதலமைச்சருக்கு நன்றி:
சிஏஏ சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தமாட்டோம் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு மமக பொதுக்குழு நன்றி தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு மமக நன்றி தெரிவித்திருக்கிறது.