சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் ஆண்களைவிட அதிகமாக 8.60 லட்சம் பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் முடிந்த நிலையில் வெவ்வேறு வாக்கு சதவீதம் வெளியானதால் குழப்பம் ஏற்பட்டது. மேலும், வாக்குச் சதவீதம் வெளியிடுவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரியில் 81.20% வாக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்ததாக கள்ளக்குறிச்சியில் 79.21 சதவிகிதமும், கரூர், நாமக்கல், சேலம் தொகுதிகளில் தலா 78 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக இறுதி வாக்கு சதவீத பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை பகுதியில் 53.96% வாக்கு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு மக்களவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் 2.21 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 2024 தேர்தலில் ஆண்களைவிட அதிகமாக 8.60 லட்சம் பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவச பேருந்து சேவை, கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை பெண்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு முன்னெடுத்து வருகிறது. அரசின் இத்தகைய திட்டங்களே பெண்கள் ஆர்வமுடன் முன் வந்து வாக்களித்தற்கு கரணம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.