வைஷாலி: ஜிம்மில் ஏற்பட்ட காதலால் ‘லிவ்-இன்’ உறவில் இருந்த காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், காதலன் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் வைஷாலி பகுதியை சேர்ந்த பிங்கி குப்தா (23) என்ற இளம்பெண், அப்பகுதியில் செயல்படும் ராக்ஸ் ஜிம் என்ற உடற்பயிற்சி கூடத்தின் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். அந்த ஜிம்மிற்கு மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த சாகிப் (24) என்ற இளைஞரும் வந்து செல்வார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ‘லிவ்-இன்’ உறவில் இருந்து வந்தனர். ஆனால் சில மாதங்களுக்கு பின்னர், அந்த இளைஞர் தனது காதலியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த பிங்கி குப்தா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார், பிங்கி குப்தாவின் சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். சம்பவம் கிடந்த வீட்டின் அறையில் தற்கொலை குறிப்பு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
இதுகுறித்து போலீஸ் ஏசிபி ஸ்வதந்த்ர குமார் சிங் கூறுகையில், ‘பிங்கி குப்தா எழுதியுள்ள தற்கொலை குறிப்பு கடிதத்தில், ‘என்னை நினைத்து வெட்கப்படுகிறேன். உனக்காக (காதலன்) நான் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தேன். ஒருகட்டத்தில் மதம் மாற நினைத்தேன். உனக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ள நினைத்தேன். ஆனால் உனக்கு புரியவில்லை. இனிமேல் என்னால் தாங்க முடியாது… குட் பை சாகிப்… ஐ லவ் யூ’ என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாகிப் மற்றும் அவரது தந்தை ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.