புதுடெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நாளை மறுநாள் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமைச்சராக இருந்த சத்தியேந்திர ஜெயின், டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது வரையில் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 21ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கு விவகாரத்தில் ஜாமீன் கோரியும், அமலாக்கத்துறை கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு இந்த விவகாரத்தில் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்று தெரிவித்து மனுவை கடந்த 9ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நாளை மறுநாள் (ஏப். 15) உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. தற்போது மக்களவை தேர்தல் நேரம் என்பதால் உச்ச நீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிவாரணம் வழங்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.