புதுச்சேரி : புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, கடல் வழியாக பணம், பரிசு பொருட்கள், மதுபானம் கடத்துவதை தடுக்கும் வகையில் சோதனை நடத்துமாறு புதுச்சேரி கடலோர காவல் படை போலீஸ் எஸ்பி பழனிவேல், போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேலய்யன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் புனித்ராஜ், அனில்குமார் மற்றும் காவலர்கள் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கடலுக்கு சென்று வந்த பின்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
படகுகளில் உள்ளே சென்று சேமிப்பு அறைகள், என்ஜின் அறைகள் உள்ளிட்ட படகுகளின் அனைத்து இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.மேலும் பணம், பரிசு பொருட்கள், மதுபானம் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் கடலில் சந்தேகப்படும் படியான படகுகள் தென்பட்டால் உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.