*பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சம்
கொடைக்கானல் : கொடைக்கானல் நகரின் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது. இங்கு காட்டு மாடு, காட்டுப்பன்றி, மான், சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது நகர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வழக்கமாகி வருகிறது.
குறிப்பாக காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதியான ஏரி சாலை அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்குள் 20க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் புகுந்து விட்டன. இவைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு திரிந்ததால் அவ்வழியே சென்ற பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டு மாடுகளை வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு மாடுகளை கண்காணித்து உடனே வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருவதால் வனவிலங்குகள் நகர், குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.