சென்னை: ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தமிழக சிறைகளில் உள்ள நீண்டநாள் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில், தமிழக அரசு அமைச்சரவை தீர்மானத்தை இயற்ற முன்வர வேண்டும். சிறைவாசிகள் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதால், அக்டோபர் 31ம் தேதி (இன்று) கூடவுள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.
அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க தாமதம் செய்தது தவறானது என சுட்டிக்காட்டியே, உச்ச நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரமான அரசியல் பிரிவு 142வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்துள்ளது. எனவே, ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக மேற்கொள்ளப்படும் சட்டப் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக அமைச்சரவை தீர்மானத்தை கொண்டுவர வேண்டும். முன்னதாக, தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைத்த 49 சிறைவாசிகளுக்கும் நிபந்தனையற்ற பரோல் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.