காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே உள்ள செருமாவிலங்கையில் பண்டித ஜவஹர்லால் அரசு வேளாண் கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள விடுதியில் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த 14ம் தேதி இரவு 7 மணிக்கு மாணவிகளின் வருகை பதிவேட்டை விடுதி பொறுப்பாளர் உமா மகேஸ்வரி சரி பார்த்தார். அப்போது இளங்கலை விவசாயம் மூன்றாமாண்டு படிக்கும் மாணவி சாதனா(20), விடுதியில் இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து மாணவி அறையை சோதனையிட்டபோது, சாதனா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், என்னை யாரும் தேட வேண்டாம். எனக்கு சினிமா வாய்ப்பு வந்துள்ளதால் சினிமா கனவை நிறைவேற்றி கொள்வதற்காக செல்கிறேன். சினிமா கனவு நிறைவேறியவுடன் வீடு திரும்புவேன் என்று எழுதி வைத்திருந்தார். இதுகுறித்து திருநள்ளாறு போலீசில் விடுதி காப்பாளர் உமா மகேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.