‘‘ஒ த்தை வாக்காளருக்கு வலை விரிக்குதாமே டெல்லி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆமா… இரட்டை இலையின் ஒத்தை எம்பி பதவிக்கு ஆப்புவச்ச ஒத்தை வாக்காளருக்கு டெல்லி இப்ப வலை விரிக்குது. தேனியின் வாரிசு வேட்புமனுவில் வருமானத்தை மொத்தமாக மறைச்ச விவகாரத்தை இந்த வாக்காளர் துணிச்சலாக கையில் எடுத்தாராம். இதற்காக நாலு வருடங்கள் கொக்கு போல காத்திருந்து நேருக்கு நேரா நின்னு வெற்றியும் பெற்றாராம். இதுபோன்ற வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவிக்கும் வழக்குகள் வித்தியாசமானதாம். குற்றம் சாட்டப்பட்டவருக்கும், வழக்கு தொடர்ந்தவருக்கும்தான் வாதமே நடக்குமாம். வேறுயாரும் தலையிடமுடியாதாம். இதில் உள்ள இடர்பாடுகளை தேனி மண்ணிலேயே அந்த வாக்காளர் தைரியமாக சந்திச்சாராம். இவர் திரட்டிய ஆதாரங்களை பார்த்து டெல்லியில இருந்து பாராட்டு வருதாம். குறிப்பாக அந்த வாக்காளருக்கு டெல்லி வலை விரிச்சிருக்காம். அப்படியே தூக்கிட்டு போய் தங்களிடம் வைக்கவும் ஆர்வமாக இருக்காங்களாம். இந்த சூழ்ச்சியை புரிஞ்சிக்கிட்ட அந்த ஒத்தை வாக்காளர் தனக்கென ஒரு பாதை இருக்குன்னு நழுவிட்டாராம். அதே போல இலைக்கட்சியின் சேலத்துக்காரருக்கும் இந்த வாக்காளர்தான் கண்ணிவெடி வச்சிருக்காராம். இது எந்த நேரத்திலும் வெடிக்குமாம். ஆனா எந்த வெடிக்கும் நாங்க அஞ்சமாட்டோமுன்னு மாங்கனியின் ரத்தத்தின் ரத்தங்கள் மார் தட்டுறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கிராவல் குவாரி அமைத்து தில்லாலங்கடி வேலை செய்து வந்த இலைகட்சி ஆட்கள் இப்போ அரண்டு போயி இருக்காங்களாமே.. ஏனாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தின் ‘பட்டியில்’ முடியும் ஊர் பகுதியில் இலைக்கட்சியினர் கிராவல் குவாரி அமைத்து ஆதிக்கத்தை நிலைநாட்டி, பெரும் வருவாய் பார்த்து வருவதே இப்பகுதியில் பெரும் பேச்சாகி இருக்கிறது. இப்பகுதியில் சில மாதங்களாக கிராவல் மற்றும் செம்மண் குவாரி அனுமதி பெற்று எடுத்து வருகின்றனர். இக்குவாரியை பழைய இலைக்கட்சி ஆதரவு அதிகாரிகளின் துணையில், தூங்காநகரத்திலிருந்து வந்துள்ள இலைக்கட்சி பிரமுகர் உள்ளிட்டோர் நடத்தி வருகின்றனர். குவாரிக்கு கனிமவளத்துறையிடம் அனுமதி வாங்குவது ஓர் இடமாகவும், கிராவல் மண் எடுப்பது மற்றொரு இடமாகவும் இருக்கிறது. அனுமதி வழங்கியது 6 அடி மட்டுமே. ஆனால் 10 அடிக்கும் மேலாக எடுத்து வருகின்றனர். இந்த இலைக்கட்சிக்காரர்களின் உச்சபட்ச விதிமீறல், இயற்கை வளத்தை சீரழித்து வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், அந்த ஆதரவு அதிகாரிகளிடமே புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் புகாரை தூரத்தில் போட்டு விட்டனராம். இதில் நொந்து போன சமூக ஆர்வலர்கள் பலரும் ‘வாட்ஸ்அப்’ குரூப்களில் இலைக்கட்சி நிர்வாகிகளின் விதிமீறல்களை ஆதாரத்துடன் பதிவு செய்து, வைரலாக்கி விட்டனர். இது இப்போது புகையத்துவங்கி, எரிய ஆரம்பித்திருக்கிறதாம். உயரதிகாரிகள் பலரும் இதன் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது காலம் காலமாக காசு பார்த்து, இப்போதும் காசு பார்க்க துவங்கியுள்ள இலைக்கட்சியினர் வயிற்றில் புளி கரைத்திருக்கிறதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாநாட்டுக்கு ஆள் புடிக்குற வேலை மும்முரமா நடக்குது போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘இலைகட்சியில இந்த மாசம் எழுச்சி மாநாடு நடத்துறாங்களாம். இதனால, எல்லா மாவட்டத்துலயும் கூட்டத்தை கூட்ட உத்தரவு போட்டிருக்காங்க. அந்த உத்தரவுப்படி, எல்லா மாவட்டத்துலயும், மா.செக்கள் கூட்டம் நடத்தி வர்றாங்க. இதுல, வெயிலூர், குயின்பேட்டை, மிஸ்டர்பத்தூர், கிரிவலம்னு இருக்குற மாவட்டங்கள்ல கூட்டம் நடக்குது. இந்த கூட்டத்துல, ஒன்றியம், நகரம் செயலாளர்களை அழைச்சி, மாநாட்டுக்கு ஒவ்வொரு கிளைகள்ல இருந்தும் ஆண்கள், பெண்கள்னு 50 பேரை கூட்டிகிட்டு வரணும், கட்சிக்காரங்க இல்லன்னாலும் பரவாயில்லை, கூட்டத்தை கூட்டுங்க. அவங்களுக்கு போக, வர்ற செலவு, சாப்பாடு செலவுன்னு எல்லாம் நீங்கதான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்களாம். இதனால இலைகட்சியில மாநாட்டுக்கு ஆள் புடிக்குற வேலை இப்ப தொடங்கிடுச்சாம். அதுமட்டுமில்லாம, மாநாட்டுக்கு ஆட்களை கூட்டிகிட்டு வரும்போது, அவங்களுக்கான செலவுகளையும் அந்தந்த ஒன்றியம், நகரம் தான் பாத்துக்கணும்னு சொல்லிட்டாங்களாம். இதுக்கும் எங்க தலையிலதான் கை வைப்பீங்களான்னு இலை கட்சியில புலம்பல் சத்தம் கேட்கத்தொடங்கியிருக்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை ஆட்சியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் நடத்திய கோல்மால் ஆட்டம் புகாராக போயிருக்காமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சி ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கோரியுள்ளார்களாம் அல்வா மாவட்டத்தினர். அதாவது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் அரசு ஊழியர்களுக்கான 30 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ளது. இந்த குடியிருப்பில் மேல் தளத்தில் ஓடுகளை மாற்றும் பணிக்கு பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாம். இந்த பணத்தில் சல்லிக்காசு கூட செலவிடாமல், மேல் தளத்தில் உள்ள ஓடுகளுக்கு காவி வண்ணத்தை பூசி விட்டு தொகையை முழுவதுமாக சுருட்டிக் கொண்டார்களாம் இலை கட்சியினரும், துறை அதிகாரிகளும். இதனால் இந்த குடியிருப்புகள் பாழடைந்து இடிக்கும் சூழ்நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதாம். இலை கட்சி ஆட்சியின் ஊழலால் குடியிருப்பாளர்கள் ஒவ்வொருவராக காலி செய்து வருகின்றனராம். இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து ஆய்வு நடத்தினால் இலை கட்சியினரும், வாரிய அதிகாரிகளும் கம்பி எண்ண வேண்டும் என புகாரும் சென்றுள்ளதாம். பழைய விஷயத்தை தோண்டுகிறார்களே….நாம் ஓய்வு பெற முடியுமா என ஊழல் செய்த அதிகாரிகளுக்கு ‘கிலி’ பிடித்துள்ளதாம். உப்ைபத் தின்றவர்கள் தண்ணி குடித்துத் தானே ஆகனும்’’ என்றார் விக்கியானந்தா.