ரயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களில், அந்தந்த மாநிலத்தவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், இன்று ரயில்வேயில் பல முக்கிய பதவிகள் தொடங்கி, முன்பதிவு கவுன்டர் ஊழியர்கள் வரை கேரள மற்றும் வடஇந்தியர்களே நீக்கமற நிறைந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றுவோருக்கு ‘தமிழே தெரியாது’ என்பது அவர் ஒன்றிய அரசின் ஊழியர் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் மதுரை கோட்டத்தில் காணப்படும் காலி பணியிடங்களை நிரப்புவதிலும் கூட கேரளாவுக்கு தாரை வார்த்திருக்கிறது ஒன்றிய அரசின் ரயில்வே நிர்வாகம்.
கடந்த 2ம் தேதி ரயில்வே தேர்வு வாரியங்கள் மூலம் 1.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என ரயில்வேத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதில் மதுரை கோட்டத்தில் உள்ள 750 காலி பணியிடங்கள் உள்பட தெற்கு ரயில்வேயில் சுமார் 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தெற்கு ரயில்வேயில், சென்னை, சேலம், திருச்சி, மதுரை மற்றும் பாலக்காடு, திருவனந்தபுரம் என மொத்தம் 6 கோட்டங்கள் உள்ளன. சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் ரயில்வே தேர்வு வாரியங்களும் செயல்பட்டு வருகின்றன.
முன்பு மாநில பிரதிநிதித்துவம் அடிப்படையில் சென்னை, திருச்சி, சேலம் மற்றும் மதுரைக் கோட்டக் காலியிடங்கள், சென்னை தேர்வு வாரியம் மூலமும், பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்ட காலியிடங்கள் திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், தற்போது மதுரைக் கோட்ட காலியிடங்களும் கூட திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த தவறான முடிவால் தமிழக இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு கிடைக்க வேண்டிய 750 காலி பணியிடங்கள் கேரள மாநிலத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இதனால் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழகத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 750 காலி பணியிடங்களை திருவனந்தபுரம் கோட்டம் கையில் திணித்தால், மதுரை கோட்டம் அக்காலத்து திருவிதாங்கூர் சமஸ்தானம் போலவே மாறும் அபாயம் உள்ளது.
1990 காலகட்டங்களில் ஒன்றிய ரயில்வே அமைச்சராக ஜாபர் ஷெரீப் இருந்தபோது, மொழிவாரி மாநிலங்களின் அடிப்படையில் ரயில்வே தேர்வு வாரியங்கள் உருவாக்கப்பட்டன.
முன்பு கர்நாடக மாநிலம் ஹூப்ளி கோட்டமானது செகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு மத்திய ரயில்வேயின் கீழ் இருந்தது. ஆனால், அந்தக் கோட்டத்தின் காலியிடங்கள், தெற்கு ரயில்வேயில் இருந்த பெங்களூரு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. தமிழகத்திலும் இதுநாள் வரை இருந்த நிலை மாறி, திருவனந்தபுரம் ரயில்வே வாரியத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அது தமிழர்களின் உரிமைகளை பறிப்பதாக அமையும். எனவே ரயில்வே துறை அந்த உத்தரவை திரும்ப பெறுவது நல்லது.