சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை மூலம் கடந்த 22ம் தேதி ஒரே நாளில் 21 ஆயிரம் ஆவணங்கள் பதியப்பட்டு ரூ.169 கோடி வரை வருவாய் வசூல் செய்துள்ளது. இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத்துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் வரும் 31ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த 22ம் தேதி மட்டும் 21,004 ஆவணங்கள் பதியப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
புதிய கூட்டு மதிப்பின் அடிப்படையின் கீழ் அன்றைய தினம் சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூ.12 கோடி வருவாயும் இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.