சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு போக்குவரத்துக் கழக பேருந்துகள் முறையாக இயக்கப்படுவது குறித்தும் மற்றும் ஆம்னி பேருந்துகள் இந்த முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு முழுமையாக இயக்குவது குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு தற்போது எஸ்இடிசி பேருந்துகள் மட்டுமே புறப்படுகிறது. இந்த முனையத்திலிருந்து அனைத்து டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் செல்வது குறித்தும் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து முழுமையாக புறப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் சென்னை கோயம்பேடு மற்றும் பிற முக்கிய இடத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவுரை வழங்கினார்.
* ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும்
மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள சென்னை பட்டினப்பாக்கம் பணிமனை திறப்பு விழாவில், பணிக்காலத்தில் உயிரிழந்த 16 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு வசதி இல்லை என அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர். கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டது. சிஎம்டிஏ அனைத்து விதமான வசதிகளையும் ஆம்னி பேருந்துகளுக்கு செய்து கொடுத்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வரும் நிலையில் கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும். இம்மாத இறுதிக்குள் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்றார்.