ஜெருசலேம்: இஸ்ரேலில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய கட்டுமான தொழிலாளர்கள் 6,000 பேர் இஸ்ரேல் செல்ல உள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய நிலையில் 6 மாதங்களை கடந்தும் ஓயவில்லை. இந்த போரில் 33,000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி விட்டனர். மேலும் இருதரப்பிலும் ஏராளமானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
நீடிக்கும் போரால் இஸ்ரேலின் கட்டுமான தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கட்டுமான தொழிலில் 80,000 தொழிலாளர்கள் கொண்ட குழுவினர் பாலஸ்தீன நிர்வாகத்தின் மேற்கு கரையில் இருந்தும், 17,000 பேர் அடங்கிய மற்றொரு குழுவினர் காசா பகுதியில் இருந்தும் பணியாற்றி வந்தனர். அக்டோபரில் போர் தொடங்கியபோது இவர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை போக்க இந்தியாவில் இருந்து கட்டுமான தொழிலாளர்களை அழைத்து செல்ல இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், கட்டுமானம் மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் ஆகியவை இணைந்து பேச்சுவார்த்தை நடத்தின. அதன்படி “ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் இருந்து 6,000 கட்டுமான தொழிலாளர்களை சிறப்பு விமானங்கள் மூலம் இஸ்ரேல் அழைத்து செல்லப்பட உள்ளதாக” இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.