பந்தலூர் : பந்தலூர் அருகே கூவமூலா பழங்குடியினர் கிராமத்தில் 4 ஆண்டுகளாக கட்டி முடிக்காமல் கிடப்பில் உள்ள வீடுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம் கூவமூலா பழங்குடியினர் கிராமத்தில் அப்போதைய மாவட்ட கலெக்டர் அரசின் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கினார். புதிய வீடுகள் கட்டுவதற்கு மாற்று இடம் இல்லாததால் ஏற்கனவே குடியிருந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டுவதற்காக அடித்தளம் அமைத்து வீடு கட்டும் பணி துவங்கப்பட்டது.
இதில், ஒரு சிலரது வீடுகள் மட்டும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்தளம் மட்டும் போடப்பட்டு அடுத்த பணிகள் துவங்காமல் உள்ளது.
15க்கும் மேற்பட்ட வீடுகள் சுவர்கள் மற்றும் கட்டப்பட்டு கூரைகள் அமைக்காமல் உள்ளது.தற்போது, பழங்குடியினர் குடியிருக்க வீடுகள் இல்லாத நிலையில் அவதிப்படுகின்றனர். மழைக்காலம் துவங்கிய நிலையில் மேலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து இந்த வீடுகளை விரைவாக கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பழங்குடியின மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.