Thursday, May 16, 2024
Home » கும்பகோணம் கும்பேஸ்வரர்!!

கும்பகோணம் கும்பேஸ்வரர்!!

by Porselvi

* அமிர்த கலசம் இருந்த கும்பத்துக்கு வாய் மட்டுமல்லாமல், கமண்டலம்போல மூக்கும் இருந்தது. இந்த மூக்கு வழியே சிவபெருமான் தொடுத்த பாணத்தால் அமுதம் வெளிவந்தது. கும்பத்தின் மூக்கிற்கு கோணம் என்று பெயருண்டு. அந்த கோணம் விழுந்த தலமே கும்ப கோணம் என்றாயிற்று.
* தேவாரத்தில் இத்தலம் குடமூக்கு என்றே அழைக்கப்பட்டது. விழுந்த இரு அமுதத்துளிகள் தனித்தனி குளமாக மாறின. ஒன்று மகாமகக் குளம்; மற்றொன்று பொற்றாமரைக் குளம்.
*பூரண கும்பம் என்பது அதன் சிகரமாக விளங்கும் தேங்காய், பூணூல், மாவிலை, தீர்த்தம் என்று எல்லாமும் அடங்கியது. இந்த கும்பத்தினின்றுநழுவிய தேங்காய் விழுந்த இடத்துக்கு அருகிலே உள்ளதுதான் இன்றையமகாமகக் குளம்.
*தேங்காய் லிங்க உருப்பெற்று சிவமானது. இன்றும் குளத்தருகே உள்ள இந்த கோயில் மூலவருக்கு நாரிகேளேஸ்வரர் என்று பெயருண்டு. நாரிகேளம் என்றால் தேங்காய் என்று பொருள்.
*கும்பத்தைச் சுற்றியிருந்த பூணூல் குளத்தின் அருகே விழுந்தது. அங்கு ஸூத்ரநாதர் எனும் திருநாமத்தோடு ஈசன் எழுந்தருளியுள்ளார். ஸூத்ரம் என்றால் பூணூல் என்று பொருள்.
*கோயிலின் நாயகன் கும்பத்தினுள் புகுந்து அருளாட்சி செய்வதால்,கும்பேஸ்வரரானார். பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், அமுத கும்பேஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார்.
*கிழக்குப் பகுதியில் கிராத மூர்த்தியாகவும் ஈசன் அருள்பாலிக்கிறார். இவர் வேடன் ரூபத்தில் தோன்றியதால் இந்தப் பெயர். வில், அம்பு ஏந்திய இந்த தோரணை வித்தியாசமானது.
*உட்பிராகாரத்தில், நடுநாயகமாக மூலவர் கும்பேஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார். இந்த லிங்க உருவே குடம் போன்று சாயலைகொண்டிருக்கிறது.
*திருச்செங்கோட்டில் ஈசன் தம் பாதி சரீரத்தை கொடுத்ததுபோல, இங்கே இறைவர் முப்பத்தாறாயிரம் கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு அருளினார். அதனால் மந்திரப் பீடேஸ்வரி என்றும், மந்திரபீட நலத்தாள் எனவும் அன்னை அழைக்கப்படுகிறாள்.
*அம்பாளின் திருமுடி முதல் திருப்பாத நகக்கணுவரை ஐம்பத்தோரு சக்தி வடிவப்பாகங்களாக காட்சியளிக்கின்றன. ஆகவே அனைத்துச் சக்திகளையும் தன்னுள் கொண்ட தலையாய சக்தி பீடமாக அம்பாளின் சந்நதி விளங்குகிறது.
*பக்தர்களுக்கு வாழ்வில் மங்களத்தை மேன்மேலும் வளர்த்துக் காப்பதால், ஞானசம்பந்தப் பெருமான்,அம்பாளை வளர் மங்கை என்று தேவாரப் பதிகத்தில் குறிக்கிறார்.
*இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரால் இயற்றப்பட்ட இத்தல நாயகன், நாயகி பற்றியகீர்த்தனையை இறைவன் முன்பு எழுதி வைத்துள்ளார்கள்.
*வேறெங்கும் காண இயலாத கல் நாதஸ்வரம் இக்கோயிலில் உள்ளது. குறிப்பிட்ட விழாக்காலங்களில் இதற்கென்றே தனிப் பயிற்சி பெற்ற இசைக் கலைஞர் இதனை வாசிக்கிறார்.
*கும்பமுனி சித்தர் மங்களாம்பிகையையும், கும்பேசரையும் தியானித்து முக்தி பெற்றது இங்குதான். வெளிப் பிராகாரத்தில் இவருக்குத் தனி சந்நதி உள்ளது. கூடவே ஆதி விநாயகரும் அருள்பாலிக்கிறார்.
*இறைவனும் இறைவியும் இத்தலத்திற்கு வரபோவதை முன்கூட்டியே அறிந்த விநாயகர் அவர்களுக்கு முன்பாகத் தான் வந்து கோயில் கொண்டார். அதனால் இவர் ஆதிவிநாயகர் என்றுஅழைக்கப்படுகிறார்.
*உட்பிராகாரத்தின் மேற்பகுதியில் கந்தன், ஆறுமுகங்கள், ஆறுதிருக்கரங்களுடன் அபூர்வமாகக் காட்சியளிக்கிறார்.
*கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோடினி, சரயு ஆகிய 9 நதிகளும், பக்தர்கள் தம்மில் கழுவிய பாபங்களைப் போக்கிக் கொள்ள இங்குள்ள மகாமகக் குளத்தில் நீராடியதாக ஐதீகம். அவர்கள் கோயிலினுள் சிலை வடிவங்களில் குளத்தை நோக்கியபடி அமைந்திருக்கிறார்கள்.
*மகாமகக் குளத்தைச் சுற்றிலும் 16 மண்டபங்கள் உள்ளன. இவை சோடசலிங்க மண்டபங்கள்என்றழைக்கப்படுகின்றன.
*தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரிடம் மந்திரியாகப் பணியாற்றிய கோவிந்த தீட்சிதரின்
(கி.பி.1542) அரிய முயற்சியால் இந்த மண்டபங்களும் தஞ்சை, கும்பகோணத்தின் வேறுசில இறைத்தலங்களும் உருவாயின.
– ராதாகிருஷ்ணன்

You may also like

Leave a Comment

seven + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi