கும்பகோணம்: கும்பகோணத்தில் வாகன விபத்தின் போது ஆற்றில் தவறி விழுந்த சிறுவனை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது. திருவிடைமருதூர் மாதாகோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவரின் இரண்டரை வயது மகன் ரோஜரை அதே பகுதியை சேர்ந்த பிரட்ரிக் சாம்சன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்து கடைவீதிக்கு சென்றுள்ளார். பின்னர் வீரசோழன் ஆற்றங்கரையில் உள்ள டாஸ்மாக்கில் மது பாட்டில் வாங்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது பிரட்ரிக் சாம்சன் நிலை தடுமாறி வீரசோழ ஆற்றில் விழுந்தார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆற்றில் இறங்கி பிரட்ரிக் சாம்சனை காப்பாற்றிய நிலையில் இரண்டரை வயது குழந்தை ரோஜர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையை தேடி வருகின்றனர். 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய பிரட்ரிக் சாம்சன் ஏற்கனவே மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.