கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் பைஜு. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 6ம் தேதி தூத்தூரை சேர்ந்த ஜோஸ் (33), இரவிபுத்தன்துறை குருசடிவளாகம் பகுதியை சேர்ந்த ஷெரின் ஆன்றோ (48), பூத்துறை காருண்யபுரத்தை சேர்ந்த சுரேஷ் (33), கோவில்வளாகத்தை சேர்ந்த சூசை ரெஜிஸ்டன் (34) உட்பட 12 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
மாலத்தீவு கடல் பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது , அந்த வழியாக சென்ற கப்பல், விசைப்படகில் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. உடனே மீனவர்கள் வயர்லெஸ் மூலம் மாலத்தீவு கடற்படைக்கு உதவி கோரினர். உடனடியா கப்பல் படையினர் சென்று 12 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். கப்பல் மோதிய விசைப்படகு கடலில் மூழ்கியது.