மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் ராம.நிவாசனை ஆதரித்து, டிடிவி தினகரன் செல்லூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் துணிச்சலாக நாடாளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதைப் போல சேலத்து சிங்கம் என தன்னை சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, அவரின் சொந்த ஊரில் ஏன் போட்டியிடவில்லை?. அவருடன் உள்ள மணி என்ற பெயர் கொண்டவர்கள் ஏன் போட்டியிடவில்லை?. அவர்கள் அனைவரும் ஒதுங்கி கொண்டு, மாட்டிக் கொண்டவர்களை பிடித்து போட்டியிட வைத்துள்ளனர். அதிமுக கூட்டணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் யாருக்கு ஓட்டு கேட்பது என, தெரியாமலேயே பிரசாரம் செய்து வருகின்றனர்.
நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்ததை மறந்து, பாஜவிற்கு மட்டுமின்றி அவரை முதல்வராக்கிய எங்களுக்கும் துரோகம் செய்த பழனிசாமி, இன்று வரை தனது குள்ளநரித்தனத்தை காட்டி வருகிறார்.இவ்வாறு பேசினார். ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நாங்கள் டிடிவி வீட்டுக்கு நாயாகவும், இப்போது சிங்கமாகவும் உள்ளோம் என்றார். அதற்கு டிடிவி, நாய் சிங்கமாகாது. ஓநாயாகத்தான் மாறும் என்றார். பதிலுக்கு ஆர்.பி.உதயகுமார், என்னை தோற்கடிக்க டிடிவி நாயாக வேலை பார்த்தார் என்றார். தற்போது, எடப்பாடியை குள்ளநரித்தனம் என கூறியுள்ளார். அடுத்து என்ன விலங்கு பெயர் பாக்கி இருக்கிறதோ…