சென்னை: நானும் கே.பி.கே.ஜெயக்குமாரும் நெருங்கிய நண்பர்கள். என் மீது வேண்டும் என்றே பழிபோடுவதற்காக யாரோ பின்புலத்தில் இருந்து வேலை செய்கிறார்கள் என்று ரூபி மனோகரன் எம்எல்ஏ கூறினார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த 2 நாட்களாக மாயமான நிலையில், நேற்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், மரண வாக்குமூலம் என எஸ்பிக்கு அவர் எழுதிய கடிதத்தில், நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து ரூபி மனோகரன் நேற்று சென்னை சத்தியமூர்த்திபவனில் நிருபர்களிடம் கூறியதாவது: கே.பி.கே.ஜெயக்குமார், நான் இடைத்தேர்தலில் போட்டியிட்ட போதும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் எனது வெற்றிக்காக முழுமையாக பாடுபட்டவர். எனக்கு உறுதுணையாக இருந்து அனைத்து விஷயங்களிலும் என்னுடன் பயணித்தவர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இருவரும் ஒன்றாகவே பயணம் செய்தோம். அவரது இழப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு என்பதை விட கட்சிக்கு பெரிய இழப்பு.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதில் உண்மை இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரிப்பார்கள். கே.பி.கே.ஜெயக்குமாருக்கும் எனக்கும் எந்த ஒரு மனஸ்தாபமும் இல்லை. என் மீதான குற்றச்சாட்டை பார்க்கும் போது வேண்டுமென்றே பழிபோட யாரோ பின்புலத்தில் இருந்து வேலை செய்வதாக தோன்றுகிறது. உண்மை காவல்துறை விசாரணையில் தெரிய வரும். விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது.
அண்ணன் தம்பியாகத் தான் பழகினோம். கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது தானா என்பதை காவல் துறையினர் தான் கண்டுபிடிக்க வேண்டும். நாங்குநேரி தொகுதியில் எனக்கு எதிரானவர்கள் என்னை தொடர்புபடுத்த பார்க்கிறார்கள். எனக்கும் அவருக்கும் எந்த விதத்திலும் பணம் கொடுக்கல், வாங்கல் கிடையாது. அரசியலில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் எந்தவித பிரச்னையும் கிடையாது, நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். இவ்வாறு கூறினார்.