அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியை சுற்றி 500க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி உணவு கடைகள் உள்ளன. இங்குள்ள கடைகளில் சிக்கன், மட்டன் பிரியாணி, வறுத்த கறி, பொரித்த மீன் என அனைத்துமே திறந்தவெளியில் சமைத்து விற்பனை செய்யப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள தள்ளுவண்டி கடைகளில் வெளியூர்களுக்கு செல்வதற்காக வருகின்றவர்கள், கோயம்பேடு மார்க்கெட் கூலி தொழிலாளர்கள் ஆகியோர் அவசர தேவைக்காவும் குறைந்த விலையில் கிடக்கிறது என்பதற்காகவும் வாங்கி சாப்பிடுகின்றனர். இதன்காரணமாக வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னை ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள், சமூகநல ஆர்வலர்கள் ஆகியோர் கூறும்போது,’’கோயம்பேடு மார்க்கெட் சுற்றி தினமும் காலை, இரவு நேரங்களில் தள்ளுவண்டி கடைகள் அதிகரித்து வருகிறது. 300 கடைகள் இருந்த நிலையில் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகிறது. தள்ளுவண்டி கடைகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மார்க்கெட் அருகே மெட்ரோ பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் தள்ளுவண்டி கடைகள் அதிகரித்து வருவதால் இரவு நேரங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்படும் சிக்கன், மட்டன் சாப்பாடு, பிரியாணி, வறுத்த கறி, மீன், இட்லி, தோசை பூரி மற்றும் போண்டா, பஜ்ஜி, வடை சுத்தம் இல்லாமலும் திறந்த வெளியில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார்கள் தெரிவித்திருந்ேதாம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் நாளுக்குநாள் தள்ளுவண்டி கடைகள் அதிகரித்து வருகிறது. எனவே சாலையோர தள்ளுவண்டி கடைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.