சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,”பூந்தமல்லி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பகுதிகளுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுமா, செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் பூந்தமல்லிக்கு கிடைக்குமா” என்றார்.
இதற்கு பதிலளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 240 எம்.எல்.டி தண்ணீர் தேக்கப்பட்டு உள்ளது. இந்த அளவை உயர்த்த நாம் கடந்த ஏழு ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். அதில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அனுமதி பெற காலதாமதம் ஆகிறது.
ராட்சத குழாய்கள் சாலைக்கு கீழே பதிக்க தற்போது அனுமதி கிடைத்தது. ஆனாலும் அதற்கும் ஓர் ஆண்டு ஆகும். தற்போது அந்த குழாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்தபின் செம்பரம்பாக்கம் ஏரியில் 540 எம்.எல்.டி அளவுக்கு நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பூந்தமல்லி, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு செம்பரம்பாக்கம் ஏரி நீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் பதில் அளித்தார்.