போபால்: மபியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளத்துக்கு தடை விதிக்கப்படாது என்றும் ரவுடிகள், கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் கூறினார். முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. மபியில் இந்தாண்டு இறுதியில் சட்ட பேரவை தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் நேற்று கூறுகையில்,‘‘பஜ்ரங் தளத்தில் ரவுடிகள், கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் உள்ளனர். இந்த நாடு அனைவருக்கும் சொந்தமாகும். பிரதமர் மோடி., முதல்வர் சவுகான் ஆகியோர் நாட்டு மக்களை பிரிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். அமைதி திரும்புவதன் மூலம் நாட்டில் வளர்ச்சி ஏற்படும். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளம் தடை செய்யப்படுமா என கேட்கப்படுகிறது. அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட மாட்டாது. ஆனால், அதில் ரவுடிகள், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்து ராஷ்டிரம் பற்றிய முன்னாள் முதல்வர் கமல் நாத் பேச்சு குறித்து கேட்டதற்கு,‘‘ அவர்(கமல்நாத்) அப்படி எதுவும் பேசவில்லை. பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் சவுகான் ஆகியோர் இந்திய அரசியல் சட்டப்படி பதவியேற்றார்களா? அல்லது இந்து ராஷ்டிரத்தின் படி பதவியேற்றார்களா? என்றார்.