Thursday, May 2, 2024
Home » தமிழ்நாட்டில் உள்ள ஜப்பான் நாட்டின் ‘கோமாட்சு’ தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள ஜப்பான் நாட்டின் ‘கோமாட்சு’ தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

by Neethimaan

சென்னை: முதலீடுகளை ஈர்க்க ஜப்பான் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒசாகா நகரில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அந்நிறுவன உயர் அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தார். சென்னையில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர், தனது 2 நாள் சிங்கப்பூர் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு, கடந்த 25ம் தேதி இரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணம் ெசன்றடைந்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலை ஒசாகாவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்ளவும், சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்து உரையாற்றினார். தொடர்ந்து, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்துக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துக்கும் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஒசாகா நகரில் உள்ள கோமாட்சு நிறுவன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கோமாட்சு நிறுவனம் கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் உலகளவில் சிறந்து விளங்குகிறது.

இந்நிறுவனம் தொழில்துறை இயந்திரங்கள், வாகன தளவாடங்கள், மின்னணுவியல் போன்ற பிற வணிகங்களிலும் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோமாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் டம்ப் டிரக், சுரங்க உபகரணங்கள், ஹைட்ராலிக் அகழ்வாராய்வு இயந்திரம் போன்றவற்றை உலகளாவிய தரநிலையுடன் தயாரித்து உள்நாடு மற்றும் சர்வதேச சந்தை தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அத்தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்த காட்சி விளக்கப்படத்தை பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்கள் டகாயுகி புரோகுஷி, கோ கமாடா ஆகியோருடன் கலந்துரையாடினார். அப்போது கோமாட்சு நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், முதல்வரிடம், இந்நிறுவனம் சர்வதேச தரத்தில் உபகரணங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருவதாக தெரிவித்தனர்.

இச்சந்திப்பின்போது, சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு அந்நிறுவனத்தினர் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

8 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi