சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேடு அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரத்த வங்கியை திறந்து வைப்பதற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு கொல்லிமலைக்கு வந்தார். அவர் அறப்பளீஸ்வரர் கோயில் செல்லும் வழியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை எழுந்து, நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் 17 கிலோ மீட்டர் தூரம், மலை கிராமங்களுக்கு நடந்து சென்று, புதுவளவு, இலக்கியம்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் உள்ள சுகாதார நல வாழ்வு மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த செவிலியர்களிடம் குறைகளை கேட்டறிந்து, நல வாழ்வு மையத்தில் மருந்துகள் இருப்பு, அலுவலர்கள் வருகை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். நலவாழ்வு மையங்களுக்கு அவசர தேவைகளுக்கு தேவைப்படும் மருந்துகள் குறித்து கேட்டறிந்தார். கிராம மக்களிடம், மக்களை தேடி மருத்துவம், தங்கள் கிராமப் பகுதிக்கு வருகிறதா? என்னென்ன மருத்துவ சேவைகள் தேவைப்படுகிறது என கேட்டறிந்தார்.