கொல்கத்தா: கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலம், கார்டன் ரீச் பகுதியில் கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 2 பேர் பலியான நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறை மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் இதுவரை சுமார் 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன. கட்டடம் இடிந்து விழும் போது பலத்த சத்தம் கேட்டதுடன், அடர்ந்த தூசி மேகம் சூழ்ந்தது. கட்டடத்தில் யாரும் வசிக்கவில்லை என்றாலும், அது அருகில் உள்ள குடிசைகளில் இடிந்து விழுந்ததில் இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில், விபத்து பகுதியை முதல்வர் மம்தா பானர்ஜி பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். மேலும் கட்டட விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்தார்.