கொடைக்கானல்: கொடைக்கானல் மஞ்சூர், பெருமாள் மலை வனப்பகுதிகளில் தொடர்ந்து 4வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிவதால் பல ஏக்கர் பரப்பிலான மரங்கள், செடிகள், புல்வெளிகள் கருகி சாம்பலாயின. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மார்ச் மாதம் துவக்கத்தில் இருந்த தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வனப்பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள அரசு வருவாய் நிலங்கள், பட்டா நிலங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களாக மஞ்சூர் வனப்பகுதியிலும், பெருமாள் மலை வனப்பகுதியிலும் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினர் மட்டுமல்லாது தன்னார்வலர்கள், மலைக்கிராம மக்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இருப்பினும் மஞ்சூர், பெருமாள் மலை வனப்பகுதிகளில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவிலை.
இப்பகுதிகளில் காட்டுத்தீ 4வது நாளாக தொடர்ந்து எரிந்து வருவதால் பல ஏக்கர் அளவிற்கு மரங்கள், செடிகள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. மேலும் வனவிலங்குகளும் தீக்கு அஞ்சி இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த காட்டுத்தீ மழை பெய்தால் மட்டுமே கட்டுக்குள் வரும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு ஹெலிகாப்டர் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்று இயற்கை, வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.