திண்டுக்கல்: கொடைக்கானல் அப்சர்வேட்டரி செல்லும் பிரதான சாலையில் மண்சரிவு ஏற்பட்டு சுமார் 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டும், ஒரு சில இடங்களில் மரங்களும் சாய்ந்து சாலையில் விழுந்தது.
அதனை தொடர்ந்து இன்று அதிகாலை சுமார் மூன்று மணியளவில் அப்சர்வேட்டரி பிரதான சாலையில் சுமார் 30 அடி உயரம் உள்ள மண்சுவர் சரிந்து சாலையில் விழுந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் நான்கு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது மண்சரிவு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கொடைக்கானல் மேல்மலை கிராம பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் தற்பொழுது மாற்று வழிச்சாலையில் சென்று வருகிறது.