திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் கடந்த அக்டோபர் மாதம் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஜெப மாநாடு நடந்தது. 3 நாள் மாநாட்டின் இறுதி நாள் கூட்டம் அக்டோபர் 29ம் தேதி நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலையில் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அரங்கில் திடீரென 3 இடங்களில் குண்டு வெடித்தது.
இதில் சம்பவ இடத்திலேயே லியோனா பவுலோஸ் என்ற பெண் கருகி இறந்தார். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக டொமினிக் மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே மருத்துவமனையில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட மேலும் 5 பேர் பலியானார்கள்.
இந்தநிலையில் உடலில் 50 சதவீத தீக்காயங்களுடன் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொடுபுழாவை சேர்ந்த ஜான் (78) என்ற முதியவர் நேற்று இறந்தார். அதைத்தொடர்ந்து குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. ஜானின் மனைவி லில்லி குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.