சென்னை: சிவகங்கை கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறைவுபெற்றது. 8-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பொம்மை, உறைகிணறுகள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டன. கொந்தகை அகழாய்வு தளத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் 9ம் கட்ட அகழாய்வை மேற்கொள்ள தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கீழ்நமண்டி கிராமத்தில் முதல்கட்ட அகழாய்வு பணிகளை காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கீழடி, கீழ்நமண்டி உள்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரும்பு கால மனிதர்களின் புதைவிடங்கள் பற்றி அகழாய்வு நடக்க உள்ளது. கீழடி அருங்காட்சியகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள புனை மெய்யாக்க செயலியையும் முதல்வர் தொடங்கி வைத்தார். அகழாய்வு செய்யப்படும் இடத்தை தமிழ்நாடு தொல்லியல்துறை பணியாளர்கள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். கீழடி தவிர அகரம், கொந்தகை என 3 இடங்களில் 9-ம் கட்ட அகழாய்வு செய்ய தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது.