*டீ போடும்போது. முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரையை சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பின்னர், டீத்தூள் போட்டு வடிகட்டி சூடான பால் சேர்த்தால், டீ திக்காகவும் சுவையாகவும் இருப்பதோடு பாத்திரமும் கருக்காது.
*டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
*குக்கரில் பருப்பை சமைக்கும்போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு தேக்கரண்டி நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
*தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
*முட்டைக்கோஸை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
*வெண்ணெயை காய்ச்சி இறக்கும்போது கடைசியில் ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டுவிடுங்கள். நெய் நல்ல மணமாகவும் இருக்கும். கசக்கவும் செய்யாது.
*வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.
*பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகித கவரில் சிறிய துளையிட்டு, பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும்.
*தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
– பா.பரத்,
*தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் வாசனை தூக்கலாக இருக்கும்.அரைத்துவிட்ட சாம்பார் வைக்கும்போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
*இட்லிக்குத் தொட்டுக்கொள்ள வைக்கும் பாசிப்பருப்பு சாம்பாரில், கடைசியாக மிளகு, சீரகம், வரமிளகாய், கொத்துமல்லி போன்றவற்றை வெறும் வாணலியில் வறுத்துவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கலக்கவும். சாம்பார் கூடுதல் சுவையாக இருக்கும்.
*மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் நன்றாக இருக்கும்.தோசைமாவில் சிறிதளவு பெருங்காயத்தூளைக் கலந்து தோசை சுட்டால் தோசை சுவையாக இருக்கும்.
*பெருங்காயம் கல் போன்று இருந்தால், உடைப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். வெறும் வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதை கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து எடுத்து ஆறியதும் ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது பயன்படுத்த சுலபமாக இருக்கும்.– இரா.அமிர்தவர்ஷினி.
*பாலில் உறை ஊற்ற தயிர், மோர் எதுவும் இல்லாதபோது, மிளகாய் வற்றலை கிள்ளி பாலில் போட்டு மூடி வைத்துவிட்டால் மறுநாள் காலையில் தயிர் ரெடி.
*சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உண்டு வந்தால் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
*கோதுமை பூரிக்கு மாவு பிசையும்போது, சிறிதளவு சாதம் வடித்த கஞ்சியை சேர்த்து பிசைந்தால், பூரி நீண்ட நேரம் மொறுமொறுப்புடன் இருக்கும்.
*சிறிதளவு டீத்தூளை போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் தொண்டை வலி, தொண்டைக்கட்டு சரியாகிவிடும்.
*ரோஜாப் பூக்களை வாங்கியதும் அதன் நடுவில் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டால், இதழ்கள் உதிராமலும், நீண்டநேரம் வாடாமலும் இருக்கும்.
– பிரியதர்ஷனி