தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டியைச் சேர்ந்த 20 வயது மாணவி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. இதுபற்றி கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தது. அவர்கள், உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடிய போது, மாணவி கிடைக்கவில்லை. புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து 3 தனிப்படை அமைத்து மாணவியை தேடி வந்தனர். அதில் மாயமான மாணவி, சென்னையில் இருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.
மாணவியை நோட்டம் விட்ட ஒரு மந்திரவாதி, உனது தந்தைக்கு நேரம் சரியில்லை, உங்கள் குடும்பம் நன்றாக இருக்க பரிகார பூஜை நடத்த வேண்டும். அந்த பூஜை மூலம், தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவாய் என ஆசைவார்த்தை கூறி, தன்னுடன் சென்னைக்கு அழைத்துச்சென்றுள்ளார். பின்னர்,மாணவி அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை அபேஸ் செய்த மந்திரவாதி, தப்பிவிட்டார். இதனிடையே, மாணவி சென்னையில் இருக்கும் தகவல் அறிந்த தனிப்படை போலீசார், அங்கு சென்று, மாணவியை மீட்டு தர்மபுரி அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நகையுடன் ஓட்டம் பிடித்த மந்திரவாதியை தேடி வருகின்றனர்.