சேலம்: சேலத்தில் தவாக நிறுவன தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: இலங்கையில் நடிகை குஷ்பூ தேவையில்லாத மோசமான கருத்துக்களை பேசி வருகிறார். இப்படி பேசுவதை குஷ்பூ நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். சில அதிகாரிகள் வேண்டும் என்றே, இந்த அரசுக்கு அவ பெயர் ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10 மசோதாக்கள் தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி அவர் ஒப்புதல் தரவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு ஆளுநரை திரும்பப்பெறவேண்டும். அவரை டிஸ்மிஸ் செய்ய வாதம் வைக்க வேண்டும். தமிழ்நாட்டின் ஆளுநராக ஒரு நிமிடம் கூட இருக்க ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.