திருவனந்தபுரம்: கோயில் திருவிழாவின் போது மிரண்ட யானை ஒன்று தனது பாகனையே மிதித்து கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோட்டையம் மாவட்டம் வைக்கம் பகுதியில் உள்ள ராமர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக குன்னிலட்சுமி என்ற யானை வரவழைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு யானைக்கு அலங்காரம் செய்யும் பணியில் கோயில் நிர்வாகிகளும், பாகன்களும் ஈடுபட்டிருந்தார்கள். யானையின் முன்னங்கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை 2ம் பாகனான சாமிச்சன் என்பவர் அவிழ்த்து கொண்டிருந்தார்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக மிரட்சியடைந்த யானை, பாகன் சாமிச்சினை துதிக்கையால் தூக்கி வீசியதுடன் கால்களால் மிதித்தது. இதில் படுகாயமடைந்த சாமிச்சனை மீட்டு, மற்றொரு பாகனும் கோயில் நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாகனை யானை தாக்கும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.