திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை ஒன்றிய அரசு கடந்த வருடம் தடை செய்தது. அதன் பிறகு அந்த அமைப்புக்கு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து பாப்புலர் பிரன்ட் அமைப்பினரின் பல்வேறு நிறுவனங்களில் என்ஐஏ அடிக்கடி சோதனை நடத்தி வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள பாப்புலர் பிரன்ட் அமைப்பின் கிரீன்வாலி என்ற நிறுவனம் முடக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தானூர், வேங்கடா, திரூர், ராங்கோட்டூர் ஆகிய 4 இடங்களில் பாப்புலர் பிரன்ட் அமைப்பினரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனை நடத்தும் விவரம் குறித்து உள்ளூர் போலீசாருக்கு கூட தெரிவிக்கப்படவில்லை.