திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபாவுக்கு 2 பேர் பலியானதை தொடர்ந்து மேலும் 4 ேபருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதற்கிடையே ஒன்றிய சுகாதாரக்குழு கேரளா விரைந்துள்ளது.
கேரளாவில் 5 வருடங்களுக்கு பிறகு நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் மிரட்டி வருகிறது. கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று 2 பேர் மரணமடைந்தனர். அவர்களின் இறப்புக்கு நிபா வைரஸ் தான் காரணம் என்று புனேயில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவர்களில் 2 பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 9 வயது சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த தனியார் மருத்துவமனை ஊழியர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே கோழிக்கோட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மாவட்டத்தில் 7 பஞ்சாயத்துக்களில் உள்ள 43 வார்டுகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து யாரும் வெளியே செல்லவோ, உள்ளே வரவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே டெல்லி மற்றும் புனேவில் இருந்து 3 ஒன்றிய சுகாதாரக் குழுக்கள் கோழிக்கோட்டுக்கு விரைந்துள்ளன. இந்த நிலையில் திருவனந்தபுரம் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அந்த மாணவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் ஒருவர், 2 பேர் பலியான கோழிக்கோடு தனியார் மருத்துவமனையின் 2 ஊழியர்களுக்கும் நிபா வைரஸ் அறிகுறி காணப்பட்டுள்ளது.