திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட கூடுதல் வழக்குகளை திரும்பப் பெற கேரள அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது அதை எதிர்த்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. கேரளாவில் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக 835 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். ஆனால் இதுவரை 100க்கும் குறைவான வழக்குகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், கூடுதல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தவிர மற்ற வழக்குகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.