திருவனந்தபுரம்: காயத்திற்கு கட்டுப்போடும் போது இளம்பெண் மருத்துவரை பள்ளி ஆசிரியர் ஒருவர் கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை தாலுக்கா மருத்துவமனையில் இந்த கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. செருகர கோணத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் சந்தீப் என்பவர் அடிதடி வழக்கு ஒன்றில் நேற்று நள்ளிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சையளிக்க கொட்டாரக்கரை தாலுக்கா மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது இரவு பணியில் இருந்த கோட்டையத்தை சேர்ந்த 23 வயதான இளம் மருத்துவர் வந்தனா தாஸ் அவரது காயத்திற்கு கட்டுப்போட்டுள்ளார். அப்போது மருத்துவர் வந்தனா தாஸ் கையில் இருந்த கத்திரிக்கோலை பிடுங்கி அவரது கழுத்து, தலை, முதுகில், சந்தீப் சரமாரியாக குத்தி உள்ளார்.
நிலைகுலைந்த வந்தனா தாஸ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். தடுக்க முயற்சி செய்து போலீசார் உட்பட 4 பேருக்கும் சரமாரியாக குத்து விழுந்தது. இதில் மருத்துவர் வந்தனா தாஸ் நிகழ்விடத்திலேயே மரணமடைந்தார். எவ்வித ஆச்சிரியமூட்டும் செயலும் நடக்காத நிலையில் கொடூர கொலையை பள்ளி ஆசிரியர் சந்தீப் செய்து இருப்பது கேரளா மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.