புதுடெல்லி: கேரளாவில் தண்ணீர் கொம்பன் என்ற யானை மரணடைந்த விவகாரம் குறித்து பாஜக முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கேரள வனத்துறையினர் தண்ணீர் கொம்பன் என்ற யானையை கும்கி யானைகளின் உதவியுடன் பல மணிநேர போராட்டத்திற்குப் பின் மானந்தவாடியில் இருந்து பந்திப்பூரில் உள்ள ராமாபுரம் யானைகள் முகாமுக்கு இடமாற்றம் செய்தனர். ஆனால் அந்த யானை உயிரிழந்தது. யானையின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில் கேரளாவில் யானைகள் மரணம் அடிக்கடி நிகழ்வது குறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான மேனகா காந்தி அளித்த பேட்டியில், ‘கேரள மாநிலம் மானந்தவாடிக்கு வந்த யானையை, கேரள வனத்துறையினர் போதைப் பொருள் கொடுத்து பிடித்து கர்நாடக வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். யானையை பிடிப்பதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. கேரள வனத்துறையினர் இரண்டு வாரங்களுக்கு ஒரு யானையை கொன்று வருகின்றனர்.
வனத்துறையின் அலட்சியமும், மிருகத்தனமும் தான் இதுபோன்ற யானை மரணங்களுக்கு காரணம். இவ்விவகாரத்தில் ஒரு அதிகாரியை கூட மாநில அரசு சஸ்பெண்ட் செய்யவில்லை. முன்பு கரடியும், புலியும் இதேபோல் கொல்லப்பட்டன. வனத்துறை அதிகாரிகளுக்கு முறையான பயிற்சி அளிப்பதில்லை. தலைமை வனவிலங்கு காப்பாளர் ஜெய்பிரசாத் மற்றும் எச்.ஓ.டி. கங்கா சிங்கும் சரியாக பணியாற்றவில்லை’ என்றார்.