நித்திரவிளை: கேரள கடற்கரையில் குமரி மாணவியை பலாத்காரம் செய்த கேரள மீனவர் மற்றும் காதலனை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவியும், அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஷரத் ப்ரியன் என்பவரை காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஜூலை மாதம் 14ம் தேதி கேரளா மாநிலம் பொழியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பருத்தியூரில் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் பொழுதை கழிக்க சென்றனர். இவர்களுடன் மாணவரின் நண்பரும் சென்றிருந்தார். இரவு நேரத்தில் காதலர்கள் இருவரும் அங்கு தனிமையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் காதலனையும் அவரது நண்பரையும் ஆடைகளை களைந்து தாக்கினர்.
தொடர்ந்து காதலியை மிரட்டி ஒருவர் பின் ஒருவராக 2 பேர் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து சக நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த வீடியோவில், காதலனையும் அவரது நண்பரையும் தாக்கும் போது, எங்களை அடிக்காதீர்கள் என்று அவர்கள் அழுவதும், இளம் பெண்ணை வீடியோ எடுக்கும் போது, பெண் தனது கையால் முகத்தை மூடும் போது வலுக்கட்டாயமாக கையை நீக்கி கொடூரன்கள் மிரட்டுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானது.
இதையடுத்து இளம்பெண் குடும்பத்தினருடன் சென்று பொழியூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தது பருத்தியூர் புதுவல் புரையிடம் பகுதியை சேர்ந்த மீனவர் ஐபின் (34) மற்றும் ஷாஜன் என்பது தெரியவந்தது. போலீசார் நேற்று முன்தினம் இரவு ஐபின் மற்றும் காதலன் ஷரத் ப்ரியன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஷாஜன், தூத்தூர் பகுதியை சேர்ந்த மற்றொரு கல்லூரி மாணவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
திருமணம் நின்றது
பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. பலாத்காரம் தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து மாணவியின் திருமணம் நின்று போனது.