கோயில் விழாக்கள், பண்டிகைகள் என தொடர்ந்து விசேஷ நாட்கள் வருகின்றன. இந்த சமயத்தில் பூக்களுக்கு நல்ல கிராக்கி இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு சில விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்து நல்ல வருமானம் பார்க்கிறார்கள். வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பொன்னை ஊராட்சியில் உள்ள நடு பெத்தநாயுடு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்ற விவசாயி தனது ஒரு ஏக்கர் நிலத்தில் கேந்திப்பூக்களைப் பயிரிட்டு 3 மாதத்தில் ரூ.3 லட்சம் என அசத்தல் லாபம் பார்த்து வருகிறார். ஒரு பொன்மாலைப்பொழுதில் தனக்குச் சொந்தமான கேந்தித்தோட்டத்தில், பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த பாஸ்கரைச் சந்தித்துப் பேசினோம். “எங்களுக்குச் சொந்தமாக 4 ஏக்கர் நிலம் இருக்கிறது. வழக்கமாக இப்பகுதியில் நெல், கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்கள்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்படும். நாம் ஏதாவது புதுமையான முறையில் விவசாயம் செய்யலாமே என்று கேந்தி மலரை சாகுபடி செய்து வருகிறேன். எந்தப் பயிராக இருந்தாலும் அதிக பரப்பில் ஒரே பயிராக சாகுபடி செய்யக்கூடாது. பிரித்து, பிரித்துதான் சாகுபடி செய்ய வேண்டும். அதுதான் சிறந்த பலனளிக்கும். பராமரிப்பு, அறுவடை, விற்பனை என அனைத்தும் எளிதாக இருக்கும். இதனால் நெல், கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களோடு கேந்தியை சாகுபடி செய்கிறேன். தற்போது 2 ஏக்கர் நிலத்தில் கேந்தி பூ மற்றும் துளசியை சாகுபடி செய்திருக்கிறேன்’’ என பேச ஆரம்பித்த பாஸ்கர் கேந்தி சாகுபடி குறித்து விளக்கினார்.
“கேந்திப்பூவை நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு பத்தாயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும். நான் ஒசூரில் இருந்து நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்திருக்கிறேன். 18 நாட்கள் வயதுடைய நாற்று ரூ.1.80 காசு என்ற கணக்கில் ரூ.18 ஆயிரத்திற்கு நாற்றுகளை வாங்கி வந்தேன். நாற்றுகளை நடவு செய்வதற்கு முன்பு 5 கலப்பை கொண்டு இரண்டு முறை உழவு ஓட்டினேன். மூன்றாவது முறை ரொட்டேவேட்டர் மூலம் உழவு ஓட்டி நாற்றுகளை நடவு செய்தேன். நிலத்திற்கு 13 யூனிட் மாட்டுச் சாணம், தழை உள்ளிட்டவற்றை அடி உரங்களாக இட்டோம். ஒவ்வொரு நாற்றுக்கு இடையிலும் 1.5 அடி இடைவெளி விட்டு நடவு செய்துள்ளோம். நடவு செய்த முதல் இரண்டு நாட்களில் அளவான தண்ணீர் மட்டுமே கொடுக்க வேண்டும். அப்போதுதான் செடிகள் நன்கு வேரூன்றி வளரும். இதிலிருந்து 12வது நாளில் முதல் களை எடுப்போம். களை எடுப்பதன் மூலம் செடிகள் நன்கு செழித்து வளரும். ஏற்கனவே போதிய அளவு எரு உரம் போட்டுள்ளதால் முதல் களை எடுக்கும்போது வேறு உரம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. 25வது நாள் களை எடுக்கும்போது 50 கிலோ காம்ப்ளக்ஸ் உரமிடுவோம். அதேபோல் 32வது நாளில் களை எடுக்கும்போது 50 கிலோ காம்ப்ளக்ஸ் உரமிடுவோம். மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பே நாற்றுகளை நடவு செய்வது நல்லது. மழைக்காலங்களில் நடவுசெய்தால் நாற்றுகள் அதிக தண்ணீரில் மூழ்கி அழுகிவிடும்.
மேலும் நடவு செய்த ஒரு மாதத்திற்குள் செடிகளில் மொட்டுகள் வந்தால், அதனை வளரவிடாமல் கிள்ள வேண்டும். அதன் பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து பூச்செடிகளில் மொட்டுகள் விட்டால் அதனை நன்றாக பராமரித்து தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும். பூச்சிகளின் தொல்லை அதிகம் இருந்தால் வேம்பு எண்ணெயை 5 மில்லி என்ற கணக்கில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் காதி சோப்புத்தூள் கரைசல் கலந்து செடிகளின் மீது தெளிப்பதன் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். மழைக்காலங்களில் பூக்களில் மழைநீர் சேர்வதால் செடிகள் சரிவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இதனால் தொங்கும்படி உள்ள செடிகளைப் பார்த்து, அதோடு குச்சிகளைச் சேர்ந்து ஊன்றிவிடுவது அவசியம்.
45 வது நாளில் பூக்கள் வரத்தொடங்கிவிடும். அறுவடைக்கு தயாரான பூக்களை நானும், எனது மனைவியும் பறிப்போம். மறுநாள் காலை அனுப்பி வைக்க வேண்டிய பூக்களை, முன்தினம் மாலையிலேயே பறித்து பதப்படுத்திவிடுவோம். மல்லி, நந்தியாவட்டை, அரளி போன்று தினமும் பறிக்க வேண்டிய அவசியம் கேந்திக்கு இல்லை. 2 நாட்கள் இடைவெளி விட்டுகூட பூக்களைப் பறிக்கலாம். பூக்கள் வாடுவதோ, அழுகுவதோ கிடையாது. பதப்படுத்தி வைத்துள்ள பூக்களை நாங்களே கோர்ப்போம். பின்னர் இதனை அழுத்தம் இல்லாமல், 30 கிலோ மூட்டைகளாகக் கட்டி பொன்னைப் பகுதியில் இருந்து நேரடியாக பெங்களூர் கே.ஆர் மார்கெட்டிற்கு அனுப்பி வைப்போம். இந்த மார்க்கெட்டில் எப்போதுமே பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் அங்கு நேரடியாக ஆட்களை வைத்து நாங்களே விற்பனை செய்கிறோம். ஒரு யார்டு (3 அடி) கேந்திப் பூவினை 30 என்ற கணக்கில் விற்பனை செய்கிறோம். மொத்தமாக 5 டன்னில் இருந்து 7 டன் வரை பூக்கள் மகசூலாக கிடைக்கும். சராசரியாக 6 டன் பூக்கள் கிடைக்கும். இதில் 9000 யார்டு வரை பூக்களைக் கட்டலாம். சராசரியாக ஒரு யார்டு பூ ரூ.36 என வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறோம். விசேஷ நாட்களில் ஒரு யார்டு ரூ.100 வரை கூட விற்பனையாகும். இதன்மூலம் ஒரு பட்டத்திற்கு ரூ.3 லட்சத்து 33 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.28 ஆயிரம் போக ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. இது 90 நாட்கள் கணக்கு மட்டுமே. வருடத்திற்கு 3 பட்டத்திலும் கேந்தி பயிரிட்டால் குறைந்தது ரூ.8 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம்’’ என கேந்தியின் வருமானம் குறித்து பேசிய பாஸ்கர், துளசியின் வருமானம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
“ஒரு ஏக்கர் நிலத்தில் துளசியை நடவு செய்திருக்கிறேன். ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் துளசி நாற்றுகள் தேவைப்படும். அனைத்து நாற்றுகளையும் பெங்களுரில் இருந்து வாங்கி வந்து நடவு செய்தேன். ஒவ்வொரு செடிகளுக்கும் இடையில் 4 அடிக்கு இடைவெளி விட்டு ஒரு செடியை நடவு செய்திருக்கிறோம். துளசிச் செடிகளை பொருத்தவரையில் நடவு செய்த 40வது நாளில் அறுவடைக்குத் தயாராகிவிடும். இதற்கு அதிகளவில் மெனக்கெடத் தேவையில்லை. மாதம் ஒருமுறை களை எடுத்தால் மட்டும் போதுமானது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை துளசியை அறுவடை செய்வோம். பூச்செடிகளை ஒருமுறை அறுவடை செய்வதன் மூலம் 50 கிலோ கிடைக்கும். இதனையும் ரூ.30 லிருந்து ரூ.60 வரை கே.ஆர்.மார்க்கெட்டில் விற்பனை செய்கிறோம். சராசரியாக ஒரு மாதத்திற்கு 800 கிலோ வரை துளசி கிடைக்கும். ஒரு கிலோ துளசியை சராசரியாக ரூ.35க்கு விற்பனை செய்தால் மாதத்திற்கு ரூ.28,000 கிடைக்கிறது. துளசி மூலம் வருடத்திற்கு ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் ஆட்கூலி, வண்டி வாடகை, பராமரிப்பு செலவுகள் ரூ.24 ஆயிரம் போக ரூ.3 லட்சத்து 12 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. பண்டிகை காலங்களில் துளசி மற்றும் கேந்திக்கு நாம் எதிர்பார்க்காத அளவிற்கு விலை கூடுதலாக கிடைக்கும். சரியான பட்டம் பார்த்து செடிகளை நடவு செய்தால் நல்ல லாபம் பார்ப்பது உறுதி’’ நம்பிக்கை பொங்க பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
பாஸ்கர்: 63839 33102.