சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் அரசியலமைப்பு கருத்தரங்கம் மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திமோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சிறுபானமை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தொடங்கி வைத்தார். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார். மூத்த தலைவர் தங்கபாலு, அகில இந்திய செயலாளர் சி.டி.மெய்யப்பன், இலக்கிய அணி தலைவர் புத்தன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் எஸ்.கே.நவாஸ், துணை தலைவர் இமலயா கே.அருண் பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர். கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:
சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் போட்டியிட கூடாது என ஒரு தீர்மானத்தின் காப்பி வாட்ஸ்அப் குழுக்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இது, அதிகாரப்பூர்வ தகவல் அல்ல. அண்ணாமலை நடை பயணம் சென்று கொண்டிருக்கிறார். அவர், என்ன வெற்றி அடைந்துள்ளார். நடைப்பயணத்தில் அவருடன் எத்தனை பேர் வந்தார்கள். இதை எல்லாம், பார்த்து தான் அது வெற்றியா, தோல்வியா என்று சொல்ல முடியும். திமுக கூட்டணியில் எத்தனை சீட்டுகள் கேட்டுள்ளோம் என்பது குறித்து உரிய நேரத்தில் தெரியப்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.