புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா குழுமம் கடந்த 2007ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்டியது. இதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அவரது மகனும் தற்போது சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்தநிலையில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.11.04 கோடி மதிப்பிலான 4 சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கர்நாடகா மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள 3 அசையும் சொத்துகள், ஒரு அசையா சொத்து ஆகியவற்றை சட்டவிரோத பணப்பறிமாற்ற சட்டத்தின் கீழ் முடக்கி அமலாக்கத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.