பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மே 10ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை துவங்கியுள்ளனர். அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக பல்வேறு தொகுதிகள் விழா கோலம் பூண்டுள்ளது. தேர்தலை ஒட்டி இரு கட்சிகள் மட்டுமின்றி சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், 5 முறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் எம்பியுமான ஷாமனூர் சிவசங்கரப்பா தேர்தலில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 91 வயதான சிவசங்கரப்பா தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூறும்போது, ‘எனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், கடவுள் அருளும் உள்ளது. வேறென்ன வேண்டும்? இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் தேவாங்கரெ தெற்கு தொகுதியில் போட்டியிடும் சிவசங்கரப்பா, இந்த தேர்தலில் போட்டியிடும் மூத்த வேட்பாளர் ஆவார். தேவாங்கரெ வடக்கு தொகுதியில் சிவசங்கரப்பாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எஸ்எஸ் மல்லிகார்ஜூன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.