சித்தூர்: வாகன சோதனையின்போது கர்நாடக மதுபானத்தை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹50 ஆயிரம் மதிப்பிலான மதுபானம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், ேநற்று மாலை தவனம்பள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான காணிப்பாக்கம் கிராஸ் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த காரை தடுத்து நிறுத்தினர். அந்த காரை சோதனை செய்தனர்.
அதில் 1,700 கர்நாடகா மதுபாட்டில்கள், மது பாக்கெட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் சித்தூர் மாவட்டம், கம்பல் கிராமத்தை சேர்ந்த லாபக்குமார்(27) என்பதும், தேர்தல் நெருங்குவதால் கர்நாடகாவில் இருந்து குறைந்த விலைக்கு மதுபானத்தை வாங்கி வந்து தேர்தலின்போது அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காருடன் மதுபானத்தை பறிமுதல் செய்தனர். மதுபானத்தின் மதிப்பு ₹50 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாபக்குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.