சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 6ம் தேதி இரவு மர்மநபர் ஒருவர் கோயில் வாசல் முன் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக கோயில் கண்காணிப்பாளர் பாலமுருகன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் அடிப்படையில், போலீசார் சிசிடிவி கேமரா பதிவு உதவியுடன் மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் தீவைத்த நபரை பாரிமுனையில் வைத்து நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் கைதானவர் அனகாப்புத்தூர் பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், சம்பவத்தின்போது அவர் கோயிலை சுற்றி வந்ததாகவும், அங்குள்ள செருப்புகளை சேகரித்து தீ வைத்ததாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.