கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேருராட்சியில் மேட்டு காலனி கிராமத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தின் 8ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பேருராட்சி 15 வார்டு மேட்டு காலனி கிராமத்தில் கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயில் உள்ளது. இங்கு, 8ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த நிகழ்வை ஒட்டி வெள்ளிக்கிழமை தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், கொடியேற்று விழா, அபிஷேகம் தீபாரதனையும், கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள முருகன் கோயிலில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக அம்மனுக்கு பால் அபிஷேகம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சனிக்கிழமை தீபாரதனை, கணபதி ஹோமம், நவச்சண்டியாக சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை சந்தன காப்பு, கூழ் ஊற்றுவது, வடை பொங்கல் வைத்தல், நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகம் நடைபெற்றது. பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, காப்பு கட்டிய பக்தர்கள் 72 பேர் வேப்பிலை அணிந்து நாவேல் தரித்து ஆலயத்தை வலம் வந்தனர். பின்னர், பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கினர். இந்த தீமிதி திருவிழாவை காண 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், கன்னிகா பரமேஸ்வரி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார்.