கண்ணமங்கலம் : அதிக லாபம் தரும் சிறுதானியங்கள் உற்பத்தியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் கண்ணமங்கலம் அருகே பயிரிடப்பட்ட கேழ்வரகு பயிர்கள் செழித்து வளர்ந்துள்ளது.தமிழர்களின் பாரம்பரிய உணவு பொருளாக அரிசி மட்டுமின்றி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை உள்ளிட்ட சிறுதானியங்களும் இருந்து வந்தது. இவை, உணவாகவும், மருந்தாகவும், பலவகைகளில் மக்களுக்கு பயன்பட்டு வந்தன. நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் உணவு பழக்கத்தை மாற்றியதால் சிறுதானியங்களின் சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்தது.
தற்போது, சிறுதானிய உணவுகளால் கிடைக்கும் பலன்கள் குறித்தும், உணவில் சிறுதானிங்களை சேர்த்து கொண்டால் மட்டுமே நோயிலிருந்து விடுபட முடியும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இவற்றை வைத்து பிரத்யேக சிறுதானிய உணவுகளை தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்களும் இயங்கி வருகின்றன. இதனால், சிறுதானியங்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது.
சிறுதானியங்கள் நேரடியாகவும், மதிப்பு கூட்டப்பட்டும், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவற்றை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. எனவே, மற்ற பயிர்களுக்கு மாற்றாக சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் வேளாண் துறை ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்தது. இந்தியாவின் முயற்சியால் இந்த அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மீண்டும் கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் பயிரிடுவதில் விவசாயிகள் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளம் கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் மருத்துவ குணம் நிறைந்த கேழ்வரகு பயிரிடப்பட்டுள்ளது. அவை செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகிறது.