Saturday, December 2, 2023
Home » திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

by Dhanush Kumar

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலை கடற்கரையில் நடந்தது. இதில் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும்லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதைதொடர்ந்து தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தன. திருக்கல்யாணத்திற்காக கோயிலில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட தெய்வானை அம்பாள், சன்னதி தெரு, வீரராகவபுரம் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரதவீதி வழியாக தெப்பக்குளம் அருகே தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அம்பாள் சப்பரத்திற்கு முன் மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பக்தர்கள் செந்தில் குறவஞ்சி பாடல்களை பாடியபடி வந்தனர். நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து மாலையில் மாப்பிள்ளை கோலத்தில் தனிச்சப்பரத்தில் புறப்பட்ட சுவாமி குமரவிடங்கப் பெருமான், திருக்கல்யாண தபசு மண்டபத்திற்கு எழுந்தருளியதோடு அங்கு காத்திருந்த தெய்வானை அம்பாளுக்கு காட்சியளித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் பட்டாசு வெடித்து பக்தி பரவசத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து தெற்கு ரத வீதி – மேலரதவீதி சந்திப்பு பகுதியில் சுவாமி – அம்பாள் தோள்மாலைகளை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி – அம்பாள் திருக்கோயிலை வந்து சேர்ந்ததும் நள்ளிரவில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்திற்கு மொய் எழுதி, பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

* பழநியிலும் கோலாகலம்

திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டியையொட்டி சண்முகர் திருக்கல்யாணம் நேற்று காலை 10.30 மணிக்கு மலைக்கோயிலில் நடந்தது. இதையொட்டி வள்ளி – தெய்வானை சமேத சண்முகருக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சுவாமி மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க மங்கல நாண் அணிவிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து மாலை மாற்றுதல், அப்பளம் உடைத்தல், போன்ற சடங்குகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதான கூடத்தில் திருமண விருந்து வழங்கப்பட்டது. பின்னர் கந்த சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்களது விரதங்களை பூர்த்தி செய்து கொண்டனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?