காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் பகுதியில், செயல்படும் நேரு மார்க்கெட் புதிதாக கட்டிடப் பணிகள் நடைபெற உள்ளதால், பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில், சின்ன காஞ்சிபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ராஜாஜி மார்க்கெட், பெரிய காஞ்சிபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நேரு மார்க்கெட் என 2 மார்க்கெட்டுகள் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றன. 100 ஆண்டுகளுக்கு மேலான, இந்த கடைகளில் பல கடைகள் சேதமடைந்தது காணப்படுகின்றன. மேலும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப போதிய இடவசதி இன்றி வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர்.
எனவே, மார்க்கெட் கடைகளை முழுவதும் இடித்துவிட்டு தற்போதைய நவீன கால தேவைக்கேற்ப புதிதாக கட்டிடம் கட்ட மாநகராட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற ஏதுவாக ராஜாஜி மார்க்கெட் தற்காலிகமாக ஓரிக்கை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், புதிய ராஜாஜி மார்க்கெட் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேரு மார்க்கெட் சுமார் ரூ.5 கோடி திட்ட மதிப்பில் 80 கடைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில், அங்கிருந்த கடைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்காலிகமாக அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட் பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று அங்குள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.